Wednesday, December 23, 2015

தேநீர்

தரையில்
கால் படாத மழையென
தெளிந்துகிடக்கிறது
கண்ணாடிக்குவளையில்
இலைகளிலிருந்து
வடித்தப்பச்சைத்தேநீர்

உன்
முகவரி
தேடித்தேடி
அலைந்த நாட்களைப்
பருகுகிறேன்

ஒவ்வொரு மிடறுகளுக்குள்
நீ
அச்சிறுயெறும்பென
நான்

மின்விசிறியைச்
சுழல விடுகிறாய்
ஆறாத தேநீருக்குள்
நீந்துகிறேன்

உன்உறவினர்களின்
நடுவே
அமர்த்திவிட்டு
அழகாய் கேட்கிறாய்
பார்வையை வீசி
இன்னொரு தேநீர்
வேண்டுமாயென
 கடலளவு வேண்டுமென்கிறேன்

கண்ணாடிக்குவளையில்
பரிமாறப்படுகிறது
உன்
கண்ணீரின் இரண்டு சொட்டுக்களை நிரப்பிய
தேநீர்

கடல்துளியைப்பருகும்
சிறுயெறும்பென
வாழ்கிறேன் நான்

No comments:

Post a Comment